விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி வெளியிடவுள்ள தொடர் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வெளியிடவுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரை தயாரித்து வெளியிடும் அமேஷான் பிரேம் நிறுவனத்திற்கு தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழீழ மண்ணின் விடுதலைக்குப் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை இழிவு செய்து , தி பேமிலி மேன் 2 என்கிற வெப் சீரியல் ஜூன் நான்கில் அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது. இந்த தொடரின் இயக்குநரும், தயாரிப்பாளர்கள் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி. கே.ஆகியோர் ராஜபக்சவின் பினாமிகள்.
ஆகவே திட்டமிட்டே விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத அமைப்பு என்று நிறுவ முயலுகின்றார்கள். இதற்கு முன் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச பெரும் தொகை கொடுத்து இந்தி திரைப்பட நாயகன் மலையாளி ஜான் ஆப்ரஹாம் மூலமாக “மெட்ராஸ் கபே” என்று ஒரு படமெடுத்து புலிகளையும் அதன் தலைமையையும் இழிவு செய்தான்.
அதை அறிந்து தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.மும்பை உயர்நீதி மன்றத்தில் எமது “தமிழர் நலப் பேரியக்கம்” வழக்குத் தொடுத்து, மெட்ராஸ் கபே படத்தை இந்தியா முழுவதும் வெளியிடத் தடை கோரியது.
அவசர வழக்காக எடுத்து விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.ஆகவே படம் தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் வெளியானது. அதே ராஜபக்ச கும்பல் தான் “தி பேமிலி மேன்-2 “ வெப்சீரியல் எடுத்துள்ளது.
இந்த தொடரில் மனோஜ்பாஜ்பாயி,சமந்தா, தேவதர்ஷினி சேத்தன், பிரியாமணி ,சரத்கெல்கர், ஸ்ரேயா தன்வந்தரி, ரவிந்திரா விஜய், சஷாப் அலி, ஆனந்சாமி, வேதாந்த் சின்ஹா, சரிப் ஆஷ்மி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.
இப்படியான வெப்சீரியல்கள் திரைப்படங்களின் மூலமாக இந்தியர்களின் பொதுப்புத்தியில் விடுதலைப் புலிகளும், அதன் தலைமையும் இந்தியாவுக்கு எதிரானது என்கிற எண்ணத்தையும்,புலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்கின்ற ஒரு எண்ணத்தையும் பதியவைக்கும் முயற்சியை ராஜபக்ச கும்பல் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்தத்தொடரின் விநியோகஸ்தராகத் தமிழ்ப்பட நடிகர் அருண்பாண்டியன் எனத் தகவல்கள் வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. தமிழ் மண்ணிலிருந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதை அருண்பாண்டியன் போன்ற தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதே போல இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபக்ச கும்பலின் அடிவருடிகளான வட இந்தியக் கைக்கூலிகள், தொடர்ந்து தமிழர்களையும், தமிழர் மண்ணையும், விடுதலைப்புலிகளையும்,கீழ்த்தரமாக விமர்சிப்பதை, நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறோம். “
சென்னையில் தீவிரவாதம்” என அந்த கதையின் முன்னோட்டத்தில் வருகிறது. இதன் மூலம் தமிழகத்தைக் காஷ்மீர் போலவும், புல்வாமா தாக்குதல் நாடகம் போன்றும் வன்முறை களமாகக் காட்டி, ஒரு பதற்றமான பகுதியாகக் கட்டமைக்க முயல்கிறார்கள்.அதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் அயோக்கியத்தனமான செயலாகும்.
பாராளுமன்றத்தில் திமுகவின் எம்.பி டிஆர் பாலு , காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்திக்கு உயர்மட்ட பாதுகாப்பு வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் வைத்துப் பேசுகிற போது, “விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து” என்றார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?
“இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்” என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து கடுமையாகத் தொடர்ந்து எழுந்து கொண்டுள்ளது. இந்த கோரிக்கையை மடைமாற்றவே ராஜபக்ச கும்பல் முயல்கின்றது.
அதாவது, விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரித்து, சிங்களவர்களைப் புனிதப்படுத்தும் வேலையைச் செய்கிறது. ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பறிகொடுத்துவிட்டு, மீளாத்துயரில் இருக்கும் தமிழர்கள் இழிவுபடுத்துப்படுத்துவதின் ஊடாக, மனிதநேயமே இல்லாமல் வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்கள்.
ஆகவே, அமேசான் பிரேம் நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம். அந்த நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கின்ற அத்தனை நாடுகளிலும், உலகத்தமிழர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத் தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்த தொடர் வெளிவராமல் தடை செய்ய வழக்குத் தொடுத்தாக வேண்டும்.
அதே போல இந்த தொடர் இந்தியாவில் வெளிவராமல் தடை செய்ய இந்திய அரசுக்கு, தமிழக அரசும்,தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய இயக்கங்களும்,தமிழின உணர்வாளர்களும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழர் நலப் பேரியக்கம் வேண்டுகோளை வைக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்