தமிழர்களுக்கு என் மீது குரோதமில்லை - மார்தட்டும் சரத் பொன்சேகா
ஸ்ரீலங்கா அரச படையினர் போரினை வெற்றிகொண்டு சுதந்திரத்தை வழங்கியதன் காரணமாகவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக நாடாளுமன்றத்திற்கு வரமுடிகிறது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காகவே ஆயுதமேந்தி போராடினார்கள் என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஒருசில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கருத்து வெளியிடப்பட்டதால் தாம் கவலையடைவதாகவும் சரத் பொன்சேகா கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை யுத்தவெற்றியை நினைவுகூரும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உரையாற்றினார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
முழு இலங்கைக்கும் சமாதானத்தை ஏற்படுத்தவும் அதேபோல வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தவுமே போரை முன்னெடுத்தோம் என்பதை இங்கு நினைவுப்படுத்துகின்றேன்.
அதற்காகவே 2010ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான என் மீது குரோதம், கோபமின்றி எனக்கு வாக்களித்தனர்.
எனினும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்றத்திற்குள் - தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காகவே ஆயுதமேந்திப் போராடினார்கள் என்பதைத் தெரிவித்தனர்.
இந்த கருத்து தொடர்பாக நான் மிகவும் கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
கருத்துகள்