இஸ்ரேல் அதிபரின் அசத்தல் செயல்; வியந்துபோன இந்தியர்கள்!
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கும், காசாமுனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 10-ம் தேதி முதல் மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதில் கடந்த 11-ம் தேதி இஸ்ரேலின் அஷ்கிலான் நகரத்தை குறிவைத்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அஷ்கிலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘கேர்கிவ்வர்’ பணியாற்றிவந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சௌமியா (30) என்ற உயிரிழந்தார்.
சௌமியா தான் பணிபுரிந்து வந்த வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷ் இடம் வீடியோகால் மூலம் பேசிக்கொண்டிருந்தபோது ராக்கெட்ட் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சௌமியாவுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த சௌமியாவின் உடல் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கடந்த 15-ம் தேதி அவரது சொந்த ஊரான கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சௌமியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சௌமியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சௌமியாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இஸ்ரேலுக்கான தென்இந்திய தூதர் ஜானத்தன் சட்ஹா நேரில் பங்கேற்றார்.
இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சௌமியாவின் குடும்பத்தினரை இஸ்ரேல் அதிபர் ரேவென் ரிவ்லின் இன்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சௌமியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலிய அதிபர் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய அதிபர் சௌமியாவின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினாரா? தொலைபேசி உரையாடலா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த கேரளவை சேர்ந்த பெண் சௌமியாவின் குடும்பத்தினரை இஸ்ரேலிய அதிபர் தொடர்பு கொண்டு பேசிய நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
கருத்துகள்