முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 429

 நடுகல்லிலும் கூட இனஒதுக்கல்



ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது


நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று


ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில் இளையவர்களுக்கு இனஒதுக்கலை எதிர்த்துப் போராட வேண்டிய மனிதக்கடமையையும் வலியுறுத்தி உள்ளது.


அதே வேளை இன்று “அபாயகரமான தீமையாக உள்ள இனஒதுக்கல் எல்லாப் பிரதேசங்களிலும் எல்லாச் சமுகங்களிலும் ஊடுருவியுள்ளது” என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டர்ஸ் அவர்களின் எச்சரிப்புடன் உலக இனஒதுக்கல் தினம் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.  “இன்று நிறவெறியர்கள் பரப்பிய பொய்மைகள் உலகில் இறந்து போயுள்ளன. ஆனால் இனஒதுக்கல் எல்லாப் பிரதேசங்களிலும் எல்லா சமூகங்களிலும் உயிர்பெற்றுள்ளது என்பது துக்கரமான உண்மை” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் அனுபவ வெளிப்பாடாக உள்ளது.


ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை, 1921இல் காலனித்துவ பிரித்தானிய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மன்னிங்ஸ் அரசியல் சீர்திருத்தம் என்னும் அரசியலமைப்பு மாற்றத்தின் கீழ் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தேர்தலே, ஈழத்தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை சட்டவாக்க சபையில் குறைத்து ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனஒதுக்கலைத் தொடக்கி வைத்தது. அந்த வகையில் 2021 ஈழத்தமிழ் மக்கள் மீதான இனஒதுக்கலின் நூற்றாண்டாகவும் அமைகிறது.


1796ஆம் ஆண்டு மதராசில் இருந்து தமிழகத்தையும் ஈழத்தையும் ஒரே நிதியின் கீழ் ஒரே ஆட்சியில் ஆளத் தொடங்கி 1802இல் இலங்கையைப் பிரித்தானியப் பேரரசின் தனியான காலனித்துவ நாடாக ஆளும் முறைமையை உருவாக்கி, 1815இல் கண்டி அரசினதும், 1832இல் வன்னிச் சிற்றரசினதும் தொடர் வீழ்ச்சியை அடுத்து, 1833இல் 16 உறுப்பினர்களை நியமனம் செய்த சட்டவாக்கச் சபை ஒன்றின் மூலம் இலங்கைத் தீவின்  சிங்கள தமிழ் அரசுக்களின் எல்லைகளை “சிலோன்” என்னும் ஒரு நாடாக இணைத்து ஆட்சி செய்யத் தொடங்கினர்.


பிரித்தானிய ஆளுநர், 5 பிரித்தானிய நிறைவேற்று அதிகாரிகள், நான்கு அரசின் அலுவலர்கள், எனப் 10 பிரித்தானிய அலுவலகர்கள் சார்ந்தவர்களையும் அலுவலர்கள் அல்லாத மூன்று ஐரோப்பியர்கள் ஒரு சிங்களவர் ஒரு தமிழர் ஒரு பறங்கியரையும் உள்ளடக்கிய 6 நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாக இந்தப் 16 உறுப்பினரைக் கொண்ட சட்டசபை இருந்தது. இந்தக் காலத்தில் ஆங்கில ஆட்சிக்குச் சாதகமானவர்கள் மேலாண்மை பெற்று சமூகத்தில் மேலாண்மை வகுப்பு ஒன்று ஆங்கிலம் படித்த கற்றோர் குழாத்தினர் என்ற பெயரில் எழுந்தது. இந்தக்கட்டமைப்பு இனஒதுக்கலுக்கான செயல்களைத் தூண்டியது.


வகுப்புவாரிப்பிரதிநிதித்துவ முறைமூலமான இந்த நியமன ஆட்சி முறையில் 1910ஆம் ஆண்டில் 11 அலுவலர்கள் சார்ந்த நியமன உறுப்பினர்களும் அலுவலர்கள் அல்லாத உறுப்பினர்கள் 10 பேரில் இரண்டு கரையோரச் சிங்களவர்கள், இரண்டு தமிழர்கள், ஒரு கண்டிச் சிங்களவர் ஒரு முஸ்லிம் ஆகியோரும் ஆங்கிலம் படித்த சொத்துடையவர்களுக்கான வாக்குரிமை மூலம் இரண்டு ஐரோப்பியர்கள், ஒரு பறங்கியர், ஒரு படித்த இலங்கையர் என்போர் தெரிவாதல் மூலமும் 21 உறுப்பினர்களைக் கொண்ட சபையாகச் சட்டவாக்கசபை விரிவுபடுத்தப்பட்டது.


1920ஆம் ஆண்டு மன்னிங் அரசியலமைப்பு மூலம் சட்டவாக்கசபை 37 ஆக விரிவாக்கப்பட்டு, 14 அலுவலர்கள் சார்ந்த நியமனமும் 23 அலுவலர்கள் அல்லாத உறுப்பினர்களில் 11 பேர் எல்லை வகுக்கப்பட்ட தேர்தல் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலின் மூலமும்  5 ஐரோப்பியர்களும், இரண்டு பறங்கியர்களும், ஒரு வர்த்தகச் சங்கத்தினரும் தெரிவாகவும் 2 கண்டியச் சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும் ஒரு இந்தியத் தமிழரும் நியமிப்பின் மூலமும் இணைக்கப்பட்டனர். இந்த பிரதிநிதித்துவ முறைமையே இலங்கைத் தீவில் இனஒதுக்கல்களை உருவாக்கி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஆளும் இனஒதுக்கல் அரசியல் காலனித்துவ அரசின் உத்தியாகத் தோற்றம் பெற்றது.


1921ஆம் ஆண்டு இந்த அரசியல் சீர்திருத்தத்தின் மூலமே இலங்கைத் தீவில் தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனஒதுக்கல் தொடக்குற்றது. தமிழர்களின் சட்டவாக்க சட்ட அமுலாக்க நிர்வாக உரிமைகளை இழக்க வைக்கத் தொடங்கிய அரசியலுக்கு  2021ஆம் ஆண்டான இந்த ஆண்டு நூறாவது ஆண்டாவதால் தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத இனஒதுக்கலின் தொடக்கத்தின் நூற்றாண்டாக இவ்வாண்டு அமைகிறது.


1931இல் இலங்கைத் தீவில் எல்லா மக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்ட பொழுது சிங்களப் பெரும்பான்மை சட்டவாக்கசபை உருவாகி தமிழர்கள்சிறுபான்மையினராக மாற வழிவகுத்தது. தனிச்சிங்கள அமைச்சரவையும் பொறுப்பாட்சிக்குரிய டொனமூர் அரசியலமைப்பால் உருவானது. 1945இல் சோல்பரி ஆணைக்குழு சுதந்திர இலங்கைக்கான அரசியலமைப்பை உருவாக்கவென வந்த பொழுது இலங்கைத் தமிழ்ப்பிரதிநிதிகளும் மலையகத் தமிழர் பிரதிநிதிகளும் தங்கள் இனத்துவங்களைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான அரசியலமைப்பைக் கோரிச் சாட்சியங்கள் அளித்த போதிலும் அவற்றை உரியமுறையில் கவனத்தில் எடுக்காது உருவாக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பால் தமிழர்கள் ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பாராளுமன்றக் கொடுங்கோன்மையை அனுபவிக்கும் மக்களாக இன்று வரை வாழ்கின்றனர். எனவே இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின ஒதுக்கல் என்பது காலனித்துவ சம்பந்தமுடையது. காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெறுதலுக்கான அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் எடுத்து நோக்கப்பட வேண்டியது.


தமிழர்களின் இறைமையுள்ள யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேய காலனித்துவ அரசிடம் இருந்து  ஒல்லாந்துக் காலனித்துவ அரசு அதனைக் கைப்பற்றி இறுதியாகப் பிரித்தானியக் காலனித்துவ அரசு அதனைக் கைப்பற்றியது. 04.02.1948 இல் காலனித்துவப் பிரித்தானிய அரசு இலங்கைக்குச் சுதந்திரத்தை வழங்கிய பொழுது சோல்பரி அரசியலமைப்பின் 29(2) விதியை சிறுபான்மை இனங்கள் மதங்களுக்கான காப்பாக அமைத்து இந்த விதி மீறப்பட்டால் பிரித்தானியப் பிரிவுக்கவுன்சிலில் முறையிடலாம் என்ற நீதி முறைமையைத் தோற்றுவித்து நிர்வாக மேலாண்மையாக மாட்சிமை தாங்கிய மகாராணி அவர்களையே தொடர்ந்து இருக்கும் முறையில் சுதந்திரத்தை வழங்கினர். இதனை உறுதி செய்யும் வகையில் 1948 இல் இலங்கைத் தீவின் இறைமை ‘சிலோன்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட இலங்கையிலும் பிரித்தானிய மகாராணியிடமும் பகிரப்பட்ட ஒன்றாக இருப்பதால் அதனைத் தனியான நாடாக ஐக்கிய நாடுகள் சபையில் அனுமதிக்கக் கூடாதென 1948 முதல் 1956 வரை இரண்டு முறை தனது ரத்து அதிகாரம் எனப்படும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்தது. எனவே இலங்கைத் தமிழர்களின் இறைமை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்திடம் முற்றாகக் கையளிக்கப்படவில்லை.


ஆயினும் 22.05.1972இல் சிங்கள பௌத்த பேரினவாதம் பிரித்தானியா வழங்கிய சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான முறையில் தன்னிச்சையான முறையில் சிறீலங்கா சிங்கள பௌத்தக் குடியரசு என்னும் இலங்கைத் தமிழர்களை ஆளும் சட்ட உரிமையற்ற ஆட்சியை ஏற்படுத்தி இலங்கைத் தமிழர்களை நாடற்ற தேச இனமாக்கினர். இதனால் அன்று முதல் இன்று வரை சிறீலங்கா என்னும் சட்டவிரோத ஆட்சி இலங்கைத் தமிழர்கள் மேல் சட்டத்தின் ஆட்சியற்ற சமுக நீதி சட்ட நீதி இரண்டுமே இல்லாத இனஒதுக்கலைச் சட்டமாகவும் அரசியலமைப்பு மீயுயர் சட்டமாகவும் கொண்டு படைபலம் கொண்டு இலங்கைத் தமிழர்களை ஆக்கிரமித்து இனஒடுக்கல் இனஒழிப்பு, இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்னும் நால்வகை இனஒதுக்கல்களை நாட்டின் அரசின் கொள்கையாகவும் அரசின் செயற்திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்தி, ஆயுத படைபலம் கொண்டு இலங்கைத் தமிழர்களின் அரசியல் பணிவைப் பெற்று வருகிறது.


அதே வேளை இலங்கைத் தமிழர்களின்


தொழிலுக்கான நிலத்தைத் தமிழர் தாயகங்களில் அரச ஆதரவும் ஆயுதப்படை அழுத்தங்களும் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் பறித்து அவர்களின் வாழ்வாதரங்களை இழக்கச் செய்து தமிழர்களின் தாயகம் மீதான நிர்வாக உரிமையை இழக்கச் செய்தல்

02 சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகங்களின் குடிசன கட்டமைப்பை மாற்றிச் சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் அதிகரித்து சட்டவாக்க உரிமையை மட்டுப்படுத்தி இழக்க வைத்தல்

இராணுவமயமாக்கலை நிர்வாகமாக மாற்றிச் சட்ட அமுலாக்கலில் சமத்துவத்தை இழக்கவைத்து சட்டத்தின் ஆட்சி என்பதை மாற்றி ஆயுதப்படைபல ஆட்சியை நடைமுறையாக்குவது. இந்த முக்கோணப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களுக்கு அடிமைச் சமுதாயமாக இலங்கைத் தமிழர்களை மாற்றி ஒரு நாடு ஒரு இனம் ஒரு மதம் என்கிற சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான இனஒதுக்கலை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் 1949 இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பை அடுத்துப் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு இருந்த சட்டவாக்க ஆளுமையைச் சிங்கள பௌத்த பேரினவாத ஆளுமையாக மாற்றி 1956இல் சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் மொழிசார் இனஒதுக்கலையும், 1965 முதல் கல்விசார் இனஒதுக்கலையும் 1960கள் முதல் சத்தியாக்கிரகத்தை ஆயுதபடைகளால் முறியடித்து சனநாயகம் சார் இனஒதுக்கலையும் 1972 முதல் குடிமைசார் இனஒதுக்கலையும் 1978 முதல் நிறைவேற்று அதிகாரம் சார் இனஒதுக்கலையும் 2009 முதல் இனஒழிப்புசார் இனஒதுக்கலையும் 2020 முதல் இராணுவ ஆட்சிமுறைமையைப் பாராளமன்றக் கொடுங்கோன்மை மூலம் நடைமுறைப்படுத்தும் இனஒதுக்கலையும் சிங்கள பௌத்த பேரினவாதம் உலக நாடுகளுக்கோ அமைப்புக்களுக்கோ எவ்வித அச்சமுமின்றி செய்து வருகின்றனர்.


இந்த சர்வாதிகார இனஒதுக்கலுக்கு எதிராக இளையவர்கள் எழுந்து இனஒதுக்கலை ஒழிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மையக்கருத்துக்கு சனநாயக வழிகளில் போராடுவதற்கு அவர்களின் உயிர், உடைமைகள், வாழ்வுக்கு உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் உலக ஊடகங்களும் எத்தகைய பாதுகாப்புக்களையும், எத்தகைய துணைகளையும் அளிப்பார்கள் என்பதிலேயே இனஒதுக்கல் சிறீலங்காவில் பரவி நிற்கும் உச்சமான வாழ்வினை மாற்றியமைத்துச் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர வாழ்வைத் தமிழர்களால் வாழ முடியும். அதாவது சுருக்கமாகக் கூறினால் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கு இலங்கைத் தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் உலகால் இலங்கைத் தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் எவ்வளவு விரைவாக மீளவும் ஏற்கப்படுகிறதோ அந்த அளவுக்குத் தான் இனஒதுக்கல் என்னும் அபாயகரமான தீமையிலிருந்து இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புப் பெறுவர். இதற்கு சிறீலங்காவின் மனித உரிமைகள் என்ற சிந்தனைக்கு அப்பால் ஈழமக்களின் மனித உரிமைகள் என்பதைப் பாதுகாக்க மனித உரிமைகள் ஆணையகம் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும்.


சூ.யோ. பற்றிமாகரன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?