உறக்கத்தில் கொல்லப்பட்ட உறவுகள் – ஒரு கரையோரக் கிராமத்தின் ஆறாதவடு
உறக்கத்தில் கொல்லப்பட்ட உறவுகள் – ஒரு கரையோரக் கிராமத்தின் ஆறாதவடு
மரணம் என்பது மனிதவாழ்வின் தவிரக்க முடியாத அடிப்படையாக இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்க்கைக் காலம் வரை அவனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஒரு ஜனநாயக நாட்டின் கடமை. ஒரு அரசாங்கத்திற்கான அடிப்படைக் கோட்பாடும் அதுதான். ஆனால் ஒரு ஜனநாயக நாட்டின் பிரசைகள் அந்த நாட்டின் இராணுவத்தால், எப்படியும் கொல்லப்படலாம் என்பதற்கு ஒரு உதாரணமான நாடு உண்டு. அழகான குட்டித்தீவு, ஆனால் குருதியில் உறைந்த தேசம். ஒவ்வொரு நாளும், உயிர்வாழ்வோம் என்ற நம்பிக்கை இன்றியே கடக்கும். உறங்கப்போகும் இராப்பொழுதுகள் விடியும் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில் உடல் சிதறிப்பலியான உயிர்கள் ஆயிரம். அப்படித்தான், அன்று நாச்சிக்குடாவில், விடிந்துகொண்டிருந்த ஒரு அதிகாலைப்பொழுதில், விமானப்படை பொழிந்த குண்டுகளில் இருபதுபேர் உடல் சிதறிப் பலியானார்கள்.
சிறிலங்காவின் வடமாகாணத்தில், வரலாற்றுப் புகழ்பெற்ற, தொன்மை வாய்ந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளது பூநகரி என்னும் பிரதேசம். பண்டைய தமிழ் மன்னர்களின் தொன்மையான ஆட்சி மையமாகவும், வர்த்தக மையமாகவும் இது இருந்து வந்துள்ளது. அத்தோடு ஆரம்பகாலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மக்கள் தொகையினைக் கொண்ட பிரதேசசெயலர் பிரிவாகவும் பூநகரி இருந்தது. பூநகரிப் பிரதேசத்தில், பல மீனவர் குடியிருப்புக்களை உள்ளடக்கிய கிராமம்தான் நாச்சிக்குடா. மீன்பிடியும் கடல்சார் கைத்தொழிலும்தான் இக்கிராமம மக்களுடைய வாழ்வாதாரம்.
16.03.1996 அன்று, இராப்பொழுது மறைந்துகொண்டிருந்த நேரம், பெரும்பலான ஆண்கள் கடலுக்குச் சென்று மீன்களுடன் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த விடியற்பொழுது, அதிகாலை 5:20 மணியளவில் சிறிலங்கா வான்படையின் பைற்றரென அழைக்கப்படும் எம்.ஐ. இருபத்துநான்கு ரக உலங்குவானூர்தி நாச்சிக்குடா அன்னை வேளாங்கன்னிப் பகுதியிலுள்ள மீனவர் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை நடாத்தியது. திடீரெனத் தொடுக்கப்பட்ட அத்தாக்குதலில், வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் என மொத்தமாக இருபது பேர் உயிரிழந்ததுடன், அறுபத்திரண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள். நூற்றுக்கணக்கான மீனவக் குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
சம்பவத்திற் காயப்பட்ட அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் கடல் வழியாக, படகுகளில் யாழ்வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பீதியில் இருந்த மக்கள் இறந்துபோன தமத உறவுகளை துரிதமாக அடக்கம் செய்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள். பலர் காடுகளில் சென்று அடைக்கலம் தேட, சிலர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் பலர் நாச்சிக்குடாவிற்கு மீளத் திரும்பவேயில்லை.
இச்சம்பவம் தொடர்பாக நாச்சிக்குடாவைச் சேர்ந்த ஜேசுதாசன் ஆன்மேரி தெரிவிக்கையில் “என்னுடைய சொந்த இடம் நவாந்துறை யாழ்ப்பாணம். தற்போது கடற்கரை வீதி நாச்சிக்குடாவில் வசித்து வருகின்றேன். 1996ம் ஆண்டு மூன்றாம் மாதம் பதினாறாம் திகதி விடியற்காலை நாங்கள் நித்திரையாக இருக்கும்போது திடீரெனக் கடற்கரையோரமாக வந்த உலங்குவானூர்தி ஒன்று தாக்குதல் நடத்தியது. இதனால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் நாங்களனைவரும் சிதறி ஓடினோம். அதன்போது எங்களுடைய அண்ணையின் மகனுக்கும் மைத்துனரின் மகனுக்கும் காயம் பட்டது. எங்களுடைய உறவினர்களில் பலர் கை, காலை இழந்தனர். இச்சம்பவத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருபது பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடல்வழியாக யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். விமானம் திரும்பவும் வருமோ என்ற பதற்றத்தின் மத்தியில் இறந்தவர்களை உறவினர்கள் அடக்கம் செய்தார்கள். அதன் பின்னர் நாங்கள் இடம்பெயர்ந்து போய் காடுகளில் வாழ்ந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் தொழிலுக்கு கடலுக்குப்போகமுடியவில்லை. காட்டுக்குள் இருந்த நாங்கள் பின்னர் படிப்படியாக கடற்கரையில் குடியேறத் தொடங்கினோம். மீண்டும், திடீரென ஒரு நாள் மாலை 5 மணியளவில் இரணைமாதா நகர்ப் பக்கமாக இருந்து வந்த வானூர்தி எங்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் செய்வதறியாத நாங்கள் திரும்ப காடுகளுக்குள் ஓடினோம். இப்படியே பயந்த நிலையில் தான் எங்களது வாழ்க்கை போய்கொண்டிருக்கின்றது” என்றார்.
16.03.1996 அன்று நாச்சிக்குடாவில் கொல்லப்பட்டவர்கள்
01. சூசைப்பிள்ளை அல்பேட்…………… ……..கடற்றொழில்……….. 50
02. யூலியஸ் டெவின்………………………………..குழந்தை………………….1
03. கனகசிங்கம் தர்சினி……………………………..மாணவி………………….10
04. கந்தையா ரமேஸ்வரன்……………………….மாணவன்……………….18
05. கந்தசாமி செந்தில்குமார்……………………..மாணவன்……………….16
06. மரியதாஸ் எட்வின்……………………………….கடற்றொழில்………..30
07. மகேந்திரன் யாழினி………………………………மாணவி………………….18
08. அன்ரன் ஜெகதீபா……………………………………மாணவி………………….12
09. ஆசைப்பிள்ளை அல்போன்ஸ்……………கடற்றொழில்………..50
10. அருளானந்தம்சேவியர் விசிற்றம்மா..வீட்டுப்பணி…………..55
11. அல்பான்ஸ் அமலோற்பவராணி………..வீட்டுப்பணி………….22
12. பொன்னம்பலம் செல்வராசா………………..கடற்றொழில்………68
13. மேரிஅமலினி……………………………………………மாணவி………………..18
14. சேவியர் கொன்சலா………………………………..மாணவி………………..14
15. விக்ரர் லூசியா…………………………………………………………………………….24
16. தவரி வேலாஜி…………………………………………………………………………….68
17. குவாட்டஸ்கேஸ் சின்ராசன்
18. மரியநாயகம் திரேசம்மா
19. அன்ரன் டயஸ்கா
காயமடைந்தவர்கள்
01. சூசைப்பிரபா-02
02. இமிறோன்
03. இராசம்மா – 30
04. இருதயசீலன் – 34
05. யூனிற்று- 16
06. யூத் – 90
07. நாகராணி – 62
08. நாச்சியம்மா – 40
09. கனகம்மா – 65
10. கந்தசாமி – 52
11. புஸ்பாயினி- 08
12. பரிமளம் – 44
13. பத்மசிறி – 25
14. பிரியா- 04
15. பவானி – 20
16. பற்றிக் – 62
17. தர்மராசா – 22
18. திரேசம்மா – 65
19. மகிந்தன்- 07
20. மாசில்தா – 24
21. மதிஜெனி – 20
22. மதியோகராசா – 25
23. மனோகரன் -15
24. மனோதா – 16
25. டன் – 23
26. அன்னைமேரி – 37
27. அன்ரன் – 34
28. அன்ரனிக்குயின்ரஸ் யூனிதா-16
29. ஆனந்தி – 23
30. அனிஸ்ரா- 06
31. அனுசியா மரியனிட்டா – 20
32. அமுதராசு -10
33. அருள்சீலன் தர்மஜோதி – 22
34. அருள்சீலன் அருள்மேரி – 04
35. அருளம்மேரி
36. அரவிந்தன்- 07
37. கொன்ஸ்பேனல் – 32
38. கொன்சியா-04
39. பொன்னம்பலம் – 43
40. தேவராசா – 45
41. மேரி சிங்கராசா – 30
42. மேரிகொன்சலா – 18
43. மேரிறீட் மரியா – 28
44. செபமாலை – 65
45. சேவியர் – 30
46. செல்வநாயகி – 31
47. செல்வநிதி – –
48. செல்வராணி – 25
49. சுப்பையா – 76
50. சுதர்சன் – 21
51. சித்திரா – 34
52. சசிரேகா
53. சரண்யா
54. விமலதாஸ் – 26
55. வளர்மதி – 30
56. ராஜ்குமார் -14
57. ரசுபாலன் – 18
58. எமில்டா- 04
59. எல்டா -14
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
கருத்துகள்