ஜெனிவாவில் ஸ்ரீலங்காவிற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி! எடுக்கப்பட்ட திடீர் முடிவு - கடும் கொதிப்பில் உயர்மட்டம்
ஜெனிவாவில் ஸ்ரீலங்கா மீதான பிரேரணைக்குப் பதிலளிப்பதற்காக மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அது தொடர்பான தமது அதிருப்தியை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்கா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சி, இன்றும் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இன்று ஸ்ரீலங்கா மீதான பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
இன்றைய வாக்கெடுப்பு தொடர்பிலும், விவாதம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்,
ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை. இதை அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஸ்ரீலங்கா மீதான முதலாவது வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்களும், இறுதியாக முன்வைக்கப்பட்ட வரைபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் தலைமையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தாலும், தகவல்களின் ஆதாரமற்ற தன்மை காரணமாக பிரிட்டனுக்குள்ளேயே இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு மேலெழுந்துள்ளது என்றார்.
இதேவேளை, நேற்றைய தினம் இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது. எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பத்தினால் வாக்கெடுப்பு இன்றைய தினம் ஒத்தி வைக்கப்பட்டது.
கருத்துகள்