ஜெனிவாவில் ஆதரவு கோர அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்த வெளிவிவகார செயலர் -அம்பலத்திற்கு வந்த தகவல்
பாரம்பரியங்களை புறக்கணித்த வெளிவிவகார செயலாளர் கொலம்பகே கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று ஜெனிவாவில் ஆதரவளிக்குமாறு உதவிகோரியுள்ளதாக கொழும்பிலிருந்த வெளிவரும் ஆங்கில நாளிதழி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த புதன்கிழமை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்துவிட்டு பௌத்தலோக மாவத்தையிலுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட ரஷ்ய தூதுரகத்திற்கு சென்றார்.
அவருடன் வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு அதிகாரியும் சென்றிருந்தார்.இவர்கள் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டேரியை சந்தித்தனர்.
முன்னய சோவியத்யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என ரஷ்யா பரப்புரை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கம்.
உதவியை கோருவதற்காக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.
அவசர தேவைகளின் போது குறிப்பிட்ட இராஜதந்திரியை வெளிவிவகார அமைச்சிற்கு அழைப்பதே பாரம்பரியமாக இதுவரை காணப்படுகின்றது.
இலங்கைக்கு அவசரதேவையிருந்திருந்தால் வெளிவிவகார கொள்கை மற்றும் வெளிவிவகார உறவுகளுக்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்ட நாட்டின் இராஜதந்திரிக்கு அவ்வாறான அழைப்பை விடுத்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்