மேற்குலக இராஜதந்திரிகளை சந்திக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு இடம்பெறும் திகதி மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படமாட்டாது என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சிறிலங்கா அரசு வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி அரசாங்கத்தினால் நிறுவப்படுகின்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட எந்தவொரு உள்ளகப்பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மாறாக சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக தமக்கு நீதியை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடலங்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுடையதா எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதற்கான நீதியையும் கோரி வருகின்றனர்.
விரைவில் விசேட சந்திப்பு
இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளது.
அண்மையில் வடமாகாணத்திற்கு சென்ற கனேடிய உயர்ஸ்தானிகரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்