நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாம் வாழ்வது ஒரு நாட்டிலா? இல்லாவிட்டால் பேய்களும் பிணம் திண்ணும் பூதங்களும் வாழும் காடுகளிலா? என்று ஒரு சந்தேகம்.
சர்வ சாதாரணமாக கொன்று புதைக்கப்பட்ட சனக்கூட்டம் ஏதோ இவர்களால் கொல்லப்படுவதற்காகவே புதைக்கப்பட்டதுபோல நிகழ்த்தி முடித்திருக்கிறார்கள்.
சிலவேளைகளில் அருகிலிருப்பவரிடம் இரக்கமே இல்லையா உங்களுக்கு என்று கேட்பதுண்டு. ஆனால் இவர்களிடம் எப்படிக்கேட்பது. இரக்கமிருப்பவர்களாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ?
அதுபோக, பொதுவாகவே இனங்களுக்கும் நாடுகளுக்கும் வரலாறு உண்டு. அது நீண்ட தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகவே இருக்கும்.
மனித புதைகுழி
ஆனால், மனித புதைகுழிகளுக்கு வரலாறு உண்டு என்றால் அது நாம் வாழும் இந்தக் கொடிய இலங்கைத் திருநாட்டில் மட்டுமே.
அட உண்மைதான், இலங்கையில் மனித புதைகுழிகளுக்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு .
இலங்கையில் மன்னார் , யாழ்ப்பாணம் செம்மணி , மற்றும் திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கப்புதைகுழிகள் , மாத்தளை எனத் தொடரும் பட்டியலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியும் சேர்ந்துகொண்டுள்ளது.
செம்மணியில் கிருசாந்தியின் மரணத்தின் பின் வெளிவந்த ரகசியங்கள் போல, இப்போது நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபை கிண்டிய கிடங்கில் வெளிப்பட்டது இன்னுமொரு ஈழத்தமிழரின் அவலத்தின் குறியீடான கொக்குத்தொடுவாய் புதைகுழிகள்.
சரி இனி விடயத்திற்கு வருவோம்
பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணம் தின்னுமாம் அதுபோலதான் சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் பட்டியல் மிக நீளம். அதிலும் குறிப்பாக அரச இராணுவம் அதன் துணைக்குழுக்கள் இவைகளின் அக்கிரமம் - இப்படி நீண்ட பட்டியலில் இந்த மனித படுகுழிகளும் ஒரு பகுதி.
போதும் இதோட நிறுத்திக்கொண்டு இனி ஊரில என்ன கதை அடிபடுதென்று பார்ப்போம்.
பூமித்தாயின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எவ்வளவு நாளைக்குதான் பொறுத்துக்கொள்ளுவா இது அப்பாவித்தமிழர்களின் புலம்பல் மொழிகளில் பிரதானமானது.
அதைத்தாண்டி
இங்கு கொல்லப்பட்டு புதைக்கப்படிருப்பவர்கள் எல்லாரும் தமிழர்கள்தான் என்பதில் சந்தேகத்திற்கு இடமேயிராது. அதிலும் புலிச்சீருடையோடு புதைக்கப்பட்டிருப்பது இன்னும்மொரு படி.
யுத்தம் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் அழைத்துச்செல்லப்பட்ட ஏராளமான பெண்போராளிகளின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகிக்கொண்டேயிருந்தன.
ஆனால் இன்றுவரை அவர்களைப் பற்றிய எந்த விதமான தகவல்களையும் இதுவரை சிறிலங்கா அரசு வெளிவிடவேயில்லை.
சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, மற்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கும் தார்மார்களின் போராட்டம் 2000 ம் நாட்களைத் தாண்டி போய்க்கொண்டேயிருக்கிறது.
அவர்களைப் பற்றியும் எந்தத் தகவலுமே இல்லை. இப்படியிருக்க இந்தப் புதைகுழிகளில் வெளித்தெரியும் என்புகள் யாருடையவை?
என்ன நடந்தது
தேச விடுதலைக்காய் இறுதிவரை களமாடிய எண்ணற்ற போராளிகளின், குறிப்பாக பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பரவலாக அன்றைய காலப்பகுதியில் காணக்கிடைத்தது.
இதுவரை அவர்களிற்கு என்ன நடந்தது என்னும் எந்த தகவல்களும் இல்லை.
தமிழர்கள் என்னும் ஒரே காரணத்தால் அவர்களையெல்லாம் கொடும் சித்திரவதைகளின் பின்னர் சிங்களம் கொன்றுபுதைத்திருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.
இனவழிப்பு, போர்க்குற்றங்கள் என்பவற்றிற்கான தண்டனையினை இன்றுவரை ஒரு சிறிதளவேனும் சிங்களம் பெறவில்லை.
சிங்களத்தின் இப்போர்க்குற்றங்களை, இனவழிப்பை மூடிமறைக்க கடந்த காலங்களில் தமிழர் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், குறிப்பாக சுமந்திரன் முண்டுகொடுத்த கதையினை இங்கு நாம் நினைவில்கொள்ளல்வேண்டும்.
சிங்களத்தின் போர்க்குற்றங்களிற்கு, இனவழிப்பிற்கு தினம், தினம் ஆதாரங்கள் மனித புதைகுழிகளிலிருந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றது.
என்ன செய்யப்போகின்றது சர்வதேசம்?
என்ன செய்யப்போகிறது தமிழினம்?
இப்படியென்று ஒரு சாரரின் கேள்விகளோடு ஒரு முகநூல் பதிவு கூட அதிகம் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
நாம் யாரைச்சொல்லி யாரை நோவது?
படைத்தவன் கண்களை மூடிக்கொண்டானா?
ஈழத்தமிழர்களை என்னவாவது செய்துவிடுங்கள் என்று...
அந்தப் புதைகுழிக்குள் இறந்தவர்கள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்…
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்