"கோபிகா-தருணிகாவுக்கு பதிலாக Jane-Sally என்றிருந்தால் அரசு விசா தந்திருக்கும்"
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா-நடேஸ் தம்பதியரின் இரு மகள்களான கோபிகா மற்றும் தருணிகாவுக்கு Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை வேறுவிதமாக நடத்தியிருக்கும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசு முனைந்திருக்காது என சாடியிருந்தார்.
பிரியா-நடேஸ் குடும்பம் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தற்போதைக்கு தடுப்புமுகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளார்.
குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.
ஆனால் Barnaby Joyce-இன் கருத்து நியாயமற்றது எனவும் தவறானது எனவும் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார். தானும் ஆஸ்திரேலிய அரசும் இக்கருத்தினை மறுப்பதாக SBS-க்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
ஒருவரது பெயரோ, அல்லது அவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதோ, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோ பொருட்டில்லை எனவும், அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமா இல்லையா என்பதற்கே தாம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.
கருத்துகள்