அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாண சபைகளுக்கு கீழ் காணப்படும் பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இனப்பிரச்சனை தீர்விற்கு தாம் தயாரில்லையென்ற செய்தியை அரசாங்கம் வெளிப்படுத்துவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்திய சிகிச்சைகள், சத்திர சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலை ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
எனினும் தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படும் இந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருகின்றமை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
இதன்படி மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
வைத்திய சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமானது என அரசாங்கம் கூறியுள்ளது.
இதன்படி மேற்குறிப்பிட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் இந்த செயற்பாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அதிகாரப்பரவலின் நோக்கத்தை இல்லாமலாக்கும் செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
கருத்துகள்