கீர்த்தியும் அனிதாவும் ஒருவருக்கொருவர் தாலிகட்டி திருமணம் செய்த கதை
ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இவ்வகையான திருமணங்கள் பல நடைபெறுவதை காணக்கூடியதாக உள்ளது.
கீர்த்தி சேகர் தனது இரண்டு வயதில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர். பிறப்பதற்கு முதலே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மெல்பனில் வசித்து வந்தார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே மருத்துவ படிப்பு படித்ததாக கூறும் கீர்த்தி, மெல்பனில் குடும்ப வைத்தியராக கடமையாற்றி வருகிறார்.
கீர்த்தி திருமண வயதை அடைந்ததும் அவரின் தாயார் சிவகாமி சேகர் அவருக்கு ஏற்ற வரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக இந்த வரன் தேடும் படலம் நடைபெற்றது. கீர்த்தி தனக்காக பார்க்கப்பட்ட வரன்களுடன் திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, ஆண் ஒருவரை திருமணம் செய்துக்கொள்வதில் ஈடுபாடு இல்லாத தன்மையை உணர்ந்துள்ளார்.
ஆகவே தனது தாயார் தொடர்ந்து தனக்காக வரன் தேடுவதை நிறுத்தவேண்டும் என்று உணர்ந்த கீர்த்தி,
தான் பெண் ஒருவரை வாழ்க்கை துணையாக்கிக்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட உடன் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ள அவரின் குடும்பத்தினர் பின்னர் ஏற்றுக்கொண்டனர்.
பெண் வாழ்க்கை துணையை தேடும் பெண்களுக்காக உள்ள செயலி மூலம் நான்கு ஆண்டுகளுக்கு முன் கீர்த்தி குயின்ஸ்லாந்தில் வசித்து வரும் அனிதாவை சந்தித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்துமத முறையில் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக கீர்த்தி அவரின் தாயாரிடம் கூறியபோது அவரின் விருப்பத்தை ஏற்று சிட்னியில் முப்பத்தைந்து ஆண்டுகளாக புரோகிதராக பலருக்கு திருமணம் செய்து வைத்து வரும் ராமி சிவன் அவர்களை தொடர்புகொண்டுள்ளார் தயார் சிவகாமி.
ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்திருமண சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இவ்வாறு பலர் தன்னை தொடர்புக்கொண்டு திருமணம் நடத்தி வைக்க கேட்பதாக கூறும் புரோகிதர் ராமி சிவன் ஒரே பாலினத் தம்பதியினருக்கு ஏற்றவாறு திருமண சடங்கு முறைகளில் சில மாற்றங்களை செய்து இவ்வகையான திருமணங்களை நடத்திவைத்து வருகிறார்.
கடந்த மாதம் கீர்த்தி அனிதாவின் திருமணம் ஒருவருக்கொருவர் தாலி அணிவித்து நடைபெற்றுள்ளது. பலர் இதனை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் எதிர்த்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பும் கீர்த்தி முன்னிலையில் பல சவால்கள் உள்ள போதிலும் அதனை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ள தயாராகி வருகின்றனர் கீர்த்தி அனிதா தம்பதியினர்.
SBS தமிழ் ஒலிபரப்பிற்கு கீர்த்தி சேகர், அவரின் தயார் சிவகாமி சேகர் மற்றும் கீர்த்தியின் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் ராமி சிவன் ஆகியோர் பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியை கொண்டு தயாரித்த விவரணத்தை கீழுள்ள இணைப்பில் செவிமடுக்கலாம்.
இந்துமத முறையில் நடந்த ஒரே பாலினத் திருமணம்
கருத்துகள்