முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b675

சீனாவின் வடக்கு கண்!! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போட்ட உத்தரவு
சீன அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களில் இருந்து முழுமையாக விலக வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தமிழர் தாயகப் பகுதிகளை பலியிட விடாது, தமிழர் தேசமும், தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளில் சீனா மேற்கொள்ளவிருந்த மின்சக்தி திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதை வரவேற்றுள்ள உருத்திரகுமாரன், போருக்குப் பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் மக்களின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''போருக்கு பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் அம்முயற்சிக்கு தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பிறகே தொடங்க வேண்டும். இசைவு என்பது திட்டங்களின் அரசியல், பொருளியல் கூறுகளுக்கு மட்டுமன்று, நம்பகமான பன்னாட்டு அமைப்பொன்றின் சூழலியல் மதிப்பாய்வின் ஊடாகச் சூழலியல் கூறுகளுக்கும் இசைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். சீன நிறுவனங்களுக்கு திட்டங்கள் வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைக்கவும் அடக்கி வைக்கவும் சீனாவுக்கு உதவும் சிறிலங்காவின் நகர்வுகள் தமிழர் இறையாண்மை மீது நெடுந்தாக்கத்தினை ஏற்படுத்தும். வட புலத்தே யாழ் குடா நாட்டையும் இந்தியாவின் தமிழ்நாட்டையும் பிரிக்கும் குறுகலான பாக்கு நீரிணையில் அமைந்த சிறு தீவுகளான நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவு ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு சைனோ சர் ஹைப்ரிட் டெக்னாலஜி என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறிலங்காவுக்கான சீனத் தூதரகம் 'மூன்றாம் தரப்பு' எதுவென்று சொல்லா விட்டாலும் அது இந்தியா தான் என்று நம்பப்படுகிறது. அந்தச் சிறு தீவுகளில் இந்திய நிறுவனமான அதானி குழுவுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள திட்டப் பணியை வழங்கும் ஒப்பந்தத்தை கடந்த பெப்ரவரியில் கொழும்பு நீக்கம் செய்து, அதனை சீன நிறுவனத்துக்கு வழங்கிய போது, இந்தியா தனது பாதுகாப்பு சார்ந்த கவலைகள் தெரிவித்தது. இந்திய நிறுவனத்தின் முயற்சியை சீனம் கீழறுத்த செயல் அந்த நேரத்தில் சிறிலங்காவில் தன் நலன்களைக் காத்துக்கொள்வதோடு அண்டை நாடுகளோடு இந்தியாவுக்குள்ள உறவுகளைக் கெடுக்கவும் கிழக்காசிய நாடாகிய சீனத்துக்குள்ள வல்லமையாகக் கருதப்பட்டது. கொழும்புத் துறைமுகத்தில் கிழக்குப் முனையத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சிக்கு இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பெய்ஜிங்கின் தூண்டுதலால் முறித்துப் போட்டதாகச் செய்தி வந்த நேரத்தில் அந்தச் சிறு தீவுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்ட நிலையங்களை நிர்மாணிக்கும் முன்மொழிவு பிறந்தது. இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்த ஒப்பந்தப்படி கிழக்குப் முனையத்தில் சிறிலங்காவின் துறைமுகப் திணைக்களத்துக்கு 51வீத பங்குகள் இருக்கும். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் 49வீத பங்குகள் இருக்கும் என கூறப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சிறிலங்கா மறுத்தன் காரணம் என்ன? சீன நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் வசதிகளையொட்டி முனையத்தை நடத்துவதில் தன் புவிசார் அரசியல் போட்டி நாடுகளான இந்தியாவும் ஜப்பானும் எவ்விதப் பங்கும் வகிக்க விடாமல் தடுக்க பெய்ஜிங் அழுத்தம் கொடுத்ததாலேயே கிழக்குப் முனையத்தை வளர்த்தெடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற சிறிலங்கா மறுத்ததாக பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவும் ஜப்பானும் அமெரிக்காவின் நெருங்கிய தோழடமை நாடுகள். நாற்கூட்டுப் பாதுகாப்பு உரையாடல் (குவாட்) பங்காளிகள். ஆனால் நாட்டின் சொத்துகளை அயல் நாடுகளுக்கு விற்கத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைக் காரணமாகக் காட்டியே சிறிலங்கா இந்தப் பேரத்திலிருந்து விலகிக் கொண்டது. சிங்கள மக்களும் இந்திய மக்களும் பண்பாட்டுறவு என்றும் சிறிலங்கா இந்தியாவின் நட்பு நாடு என்றும் தம்பட்டமடிக்கும் கொழும்பின் நிலையினை இந்த விலக்கல், அதன் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. 2019 மே மாதம் செய்த மூல உடன்பாட்டை மதித்து நடக்கும்படி கொழும்பை நியூ டெல்லி கேட்டுக் கொண்டது. திட்டங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு அளித்த உறுதிப்பாடுகளிலிருந்து விலகிக் கொள்ளும் ராஜபக்சவின் நகர்வு, இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்த கருத்துக்களை மீளுறுதி செய்கிறது. 1998இல் பெர்னாண்டஸ் கூறினார் 'சீனா எதிர்காலத்தில் முதலாம் எண் அச்சுறுத்தலாகும்....இடைக்கால நோக்கிலும் நெடுங்கால நோக்கிலும் இந்தியாவுக்கு முதன்மையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்து வரவே வாய்ப்புண்டு. சீனத்தின் அச்சுறுத்தல் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை விடவும் பெரிது. இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய அக்கறை கொண்ட எவரும் இந்தக் கருத்தை ஏற்கத் தான் வேண்டும்.' என. மேற்கே பாகிஸ்தானில் குவாதர் தொடங்கி கிழக்கில் கோக்கோ தீவுகள் வரை இந்தியா மீதான கடல்சார் சுற்றிவளைப்பானது தெற்கே சிறிலங்காவில் பெய்ஜிங்கின் வளரும் செல்வாக்கினால் முழுமையடைகிறது. இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மோகன் மாலிக் கூறியது போல், 'இந்தியாவின் பால் சீனத்தின் மூலோபாயம் என்பது சுற்றிவளைத்தல், மூடியடைத்தல், சிக்கவைத்தல் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது. ' 2017ஆம் ஆண்டு தென்னிலங்கையில் இந்தியப் பெருங்கடல் கடற்போக்குவரத்து வழிகளையொட்டி அமைந்த அம்பாந்தோட்டாவில் சீனம் கட்டிய துறைமுகத்தை பெய்ஜிங்கிடம் 99 ஆண்டுக் குத்தகைக்குக் கொழும்பு ஒப்படைத்தது. 2014ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்ட போது புது டெல்லி வன்மையாக எதிர்த்திருந்தது. சிறிலங்காவின் வட கடலோரத்தில் யாழ். குடாநாடும் அதன் கடற்பகுதியில் அமைந்த சிறு தீவுகளும் தொன்றுதொட்டுத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. ஆக, அவை தமிழர் தாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். மேலும், சிறிலங்கா தீவின் தமிழர் தாயக பகுதியும், அதையொட்டிய கடற்பிராந்தியம் தமிழர் இறைமைக்கு உட்பட்டவை. இதனை உறுதி செய்திடத் தமிழர் தேசமும், தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும் என” நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?