பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் மீளெடுக்குமாறு அழைப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள மிக மோசமான சட்டமாக கருதப்படும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக மீளெடுக்குமாறு மீண்டும் சர்வதேச ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை அரசாங்கத்திடம் பயங்கரவத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய வலைய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் கைதிகளை நியாயமான விசாரணைக்கு உட்படுத்தாமல், புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பில் வைக்க அனுமதிப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பெரும்பாலும் சிறுபான்மையின மக்கள் உரிய செயன்முறை மறுக்கப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அவர்களில் சிலருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்பதுடன், பலர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் வரை காத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளெடுப்பதுடன், புதிய விதிமுறைகளை மீளப் பெறுமாறும் அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்