மனைவியின் அந்தரங்க வீடியோ; நண்பர்களுக்கு ஷேரிங்… இன்ஜினீயர் மீது புகார்!
சென்னையைச் சேர்ந்தவர் சுவேதா (பெயர் மாற்றம்). இவர் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார். படிக்கும்போது, சுவேதாவும் ஆவடியில் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மதனும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகியிருக்கின்றனர். இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு, மார்ச் 4-ம் தேதி திருமணம் செய்திருக்கிறார்கள். இந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சுவேதா, சில தினங்களுக்கு முன் அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அதற்கு முன் நான்கு பக்கங்களுக்கு தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதிவைத்திருக்கிறார். மயங்கிக்கிடந்த சுவேதாவை மீட்ட அவரின் அம்மா, குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தார். சிகிச்சைக்குப் பிறகு சுவேதா நலமாக இருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸார் மதன், அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
சுவேதா எழுதிய கடிதத்தில், “என்னுடைய கணவர், அவரின் குடும்பத்தினரால் மனதளவிலும் உடலளவிலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும் எனது கணவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பு என் கணவருக்குச் சில பெண்களுடன் நட்பு இருந்திருக்கிறது. அந்தத் தகவல் அவரின் செல்போனை நான் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. மேலும் என் கணவரின் செல்போனில் சில பெண்களின் நிர்வாண போட்டோஸ், வீடியோஸ் இருந்தன. அது குறித்து என் கணவரிடம் கேட்டபோது தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். அவரின் குடும்பத்தினரும் என்னைச் சமாதானப்படுத்தி, அவருடன் வாழவைத்தனர். குழந்தைக்காக நான் அவரோடு வாழ்ந்துவந்தேன். திருமணமானதும் என் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணையாக சோபா, கட்டில், சில்வர் பாத்திரங்களைக் கேட்டனர். அந்தப் பிரச்னை முடிந்த பிறகு என் கணவரால் எனக்கு வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது.
என்னையும் என் கணவர் நிர்வாணமாக வீடியோ, புகைப்படங்களை எடுத்தார். அவற்றை அவரின் நண்பர்களுக்கு என்னுடைய செல்போனிலிருந்தே அனுப்பிவைத்து என்னைத் தவறான பெண் என்பதுபோல சித்திரித்திருக்கிறார். என்னுடைய தனிப்பட்ட போட்டோ, வீடியோ. ஈரோட்டிலிருக்கும் என் கணவரின் நண்பரான ஜூவல்லரி ஷாப் ஓனர் ஒருவரின் செல்போனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதைவைத்து என்னை மிரட்டிய ஜூவல்லரி ஓனர், சென்னைக்கு வந்து ஹோட்டலில் தங்கினார். அவரை பிசினஸ் விஷ்யமாகச் சந்திக்க என்னை என் கணவர் அந்த ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தார். அப்போதுதான் என்னுடைய தனிப்பட்ட போட்டோ, வீடியோக்கள் என் கணவரின் நண்பர்களிடம் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் என்னுடைய குழந்தையையும் என்னைவிட்டுப் பிரித்து கணவர் குடும்பத்தினர் சென்றுவிட்டனர். அதனால்தான் மனமுடைந்த நான் இந்தத் தற்கொலை முடிவை எடுக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்ட கணவர், அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்துகள்