தன்னைத் தானே எரியூற்றிக்கொண்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்
மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே எரியூற்றியதில் மரணமடைந்துள்ளார்.
கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38. ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரின் குடும்பம் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது.
இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார்.
இவர் தற்காலிகமாக இங்கே தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்தது என்றும், எட்டு ஆண்டுகளாக நிரந்தர பாதுகாப்பு தனக்குக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும் கேள்வியுடனும் வாழ்ந்த அவர், பல மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் தெரியவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றித் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார் என்று தமிழ் ஏதிலிகள் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள்