படையினரால் ஒருபோதும் கொரோனாவை ஒழிக்க முடியாது - எதிரணி எம்.பி குற்றச்சாட்டு
இலங்கையில் கொரோனா தொற்றானது கட்டுப்பாடுகள் இன்றி பரவல் அடைவதற்கு துறைசார்ந்த அறிவற்ற இராணுவத்தினரே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலாதா அத்துகோரள, போர் செய்யப் பயிற்சி பெற்ற இராணுவப் படையினரால் ஒருபோதும் கொரோனா தொற்றை முற்றுமுழுதாக ஒழிக்க முடியாது என கூறியுள்ளார்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தாம் அரசாங்கம் கூறுவதையே செய்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்றால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதை செய்கின்றார்களா? அல்லது சுகாதார அமைச்சர் கூறுவதை செய்கின்றார்களா? கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறுவதைக் கூட அரசாங்கம் செவிமடுப்பதில்லை என்று அவரே குறைகூறுகின்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் கூறிய விடயத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கும் இதே விடயத்தையே ஆரம்பத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியது.
எவ்வாறு வைத்தியர்களுக்கு போர்க்களத்திற்கு சென்று யுத்தம் புரிய முடியாதோ, அதே போன்று யுத்தத்திற்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினரால் மருத்துவத்துறையுடன் தொடர்புடைய கொவிட் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது.
பொய் வாக்குறுதிகளைக் கூறி ஜனாதிபதி தேர்தலில் மக்களை ஏமாற்றியதைப் போன்றே, பொதுத் தேர்தலிலும் இந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துகள்