ஒழுங்கீனமாக செயல்பட்ட இலங்கை வீரர்கள் மூவரை விசாரிக்க விசேட குழு நியமனம்
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மூன்று இலங்கை கிரக்கெட் வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கென ஐவர் கொண்ட விசேட குழுவொன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.
உதவி அணித் தலைவர் குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரே சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளையும் ஹொட்டெல் ஊரடங்கையும் மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான விசாதணைகளை நடத்தவென நீதியரசர் நிமால் திசாநாயக்க (ஓய்வு நிலை உயர்நீதிமன்ற நீதிபதி), சட்டத்தரணிகளான பண்டுக்க கீர்த்தினந்த, அசேல ரேவக்க மற்றும் உச்சித்த விக்ரமசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) எம். ஆர். டபிள்யூ. டி ஸொய்சா ஆகிய ஐவரைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று நியமித்தது.
வீரர்கள் டேர்ஹாம் வீதிகளில் இரவு வேளையில் அலைந்துதிரிந்தமை தொடர்பான வீடியோ காட்சி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து வீரர்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகினர். இதனை அடுத்து குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு தற்காலிகத் தடை விதித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட், அவர்களை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இடைநடுவில் நாட்டுக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.
நாடு திரும்பிய மூவரும் நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.
கருத்துகள்