நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 170 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் தென்மேற்கு சிட்னியைச் சேர்ந்த 60 வயதுகளிலுள்ள நபர் என தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 210 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 122 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இவர்களில் ஆகக்குறைந்தது 21 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு வீதமானோர் 40 வயதுக்கு குறைவானோர் என மாநில சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் சுகாதார அமைச்சர் Brad Hazzard கோரிக்கைவிடுத்தார்.
இந்தப்பின்னணியில் Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland Parramatta, Campbelltown மற்றும் Georges River ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் பணியாளர்களில் அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் தமது உள்ளூராட்சி பகுதிகளைவிட்டு வெளியே செல்லமுடியும்.
இதுதவிர குறித்த பகுதிகளில் வாழ்பவர்கள் தமது வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட இடங்களுக்கே அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம்செய்ய முடியும்.
மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் 200 டொலர்களிலிருந்து 500 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை(அனுமதிபெற்றவர்கள் மாத்திரம்), பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் 105,963 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், இவர்களில் ஒருவர் மாத்திரமே நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 32,760 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.
விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை நீக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவந்துள்ளன.
என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
இதேவேளை குயின்ஸ்லாந்தில் புதிதாக 6 பேருக்கு டெல்டா வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் 11 உள்ளூராட்சிப் பகுதிகளில் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 3 நாட்களுக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்