பிரித்தானிய அரசுக்கு கடும் எச்சரிக்கை
இங்கிலாந்து பிராந்தியத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் யாவும் எதிர்வரும் 19 ஆந் திகதியன்று முடிவுக்கு வரவிருப்பதை நேற்று பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ள பின்னணியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முற்றாக நீக்குவதால் பேரழிவுகள் ஏற்படும் என பிரித்தானிய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் அகற்றுவது பொறுப்பற்ற முடிவு எனவும் மூத்த மருத்துவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஜூலை 19 ஆம் திகதியன்று இங்கிலாந்து பிராந்தியத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ள நிலையில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை இங்கிலாந்தின் மூத்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து நேற்று பிரித்தானியப்பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ள பின்னணியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
புதிய தளர்வுகளின் அடிப்படையில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாட்டு சமூக இடைவெளி விதிகள் கைவிடப்படும். சட்டப்பூர்வமாக முகக்கவசங்களை அணியவேண்டியதுமில்லை.
ஆனால் அரசாங்கத்தின் இவ்வாறான நகர்வுகள் ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகளையும் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அனுமதிக்கப்படவேண்டிய நிலைமையை உருவாக்கும் என விஞ்ஞான ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்பதால் வைரஸ் தனது பிடியை மீண்டும் இறுக்கிக்கொள்ள, இந்த தளர்வுகள் அனுமதிக்கும் என பிரித்தானிய மருத்துவ சங்கத்தின் தலைவரான மருத்துவர் சாந்த் நாக்பால் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில் பிரான்சிலும் புதிய தளர்வுகள்; எச்சரிக்கையுடன் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் கொரோனா தொற்று குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமான நடைமுறையாக வரவுள்ளது. நேற்று அரசதலைவர் இமானுவேல் மக்ரன் அறிவித்தபடி,
எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 50 க்கும் மேற்பட்டவர்கள் கூடும் இடங்களில் சுகாதார சான்றிதழ் அவசியமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்