நான்கு கோடி டொலர் செலவில் சிட்னியில் உருவாகும் இந்து ஆலயம்!
ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு மிகப்பெரிய இந்து ஆலயம் சிட்னியில் சுமார் நான்கு கோடி டொலர்கள் செலவில் நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
Bochasanwasi Akshar Purushottam Sanstha (BAPS)-ஆல் சிட்னி Kemps Creek, Adlington வீதியில் அமைக்கப்படும் இந்த ஆலயம், முழுமையாக நிர்மாணித்து நிறைவுபெறுவதற்கு ஒன்பது வருடங்களாகலாம் என்றும் முதல்கட்ட வேலைகள் 2023 இல் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை வடிவமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள DDC Architecture and Interior Design நிறுவனம், ஆலய நிர்மாணத்துக்கான வடிவத்தை இந்தியாவுக்கு சென்று நுட்பமாக ஆராய்ந்துவந்ததாகவும், இதன்பிரகாரம் ஆலய வரைபடத்தை வடிவமைப்பதற்கு மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 மீற்றர் உயரத்தில் அமையவுள்ள இந்த ஆலயத்துடன், இரண்டு மாடிகள் கொண்ட இரண்டு சமூக மண்டபங்களும் கட்டப்படவுள்ளன என்றும் அவற்றுடன் வாகன தரிப்பிடம் மற்றும் பூங்காவும் ஆலயத்துடன் இணைந்துகொள்ளும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.
சமூக மண்டபங்கள் சுமார் இரண்டாயிரம் பேருக்கானதாக அமையும் என்றும் இந்த மண்டபங்களுடன் அமையவுள்ள சாப்பாட்டு மண்டபம் ஆயிரம் பேரைக்கொள்ளக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக இந்த ஆலயத்தை அமைப்பதற்கு, ஆலயத்தை நிர்மாணிக்கும் நிறுவனம் சிட்னி Penrith City கவுன்ஸிலோடு இணைந்து பணியாற்றியதாகவும் கடந்த மாதம் Sydney Western City Planning Panel இந்த ஆலய நிர்மாணத்திற்கான அனுமதியை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்