முகக்கவசம் வாங்க பணமில்லை… பறவை கூட்டினை மாஸ்க்காக அணிந்து வந்த முதியவர்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு மாநில அரசுகளும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. அதிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசங்களை காட்டாயம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. விதிகளை மீறினால் கடுமையான அபராதங்களையும் மாநில அரசுகள் விதித்து வருகின்றன.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் பொது வெளியில் வருபவர்கள் முகக்கவசங்களை காட்டாயம் பயன்படுத்துமாறு இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆடு மேய்ப்பவர் ஒருவர், தன்னிடம் முகக்கவசம் வாங்குவதற்கு காசு இல்லை என்பதாலும், முகக்கவசம் அணியாமல் போனால் விதிக்கப்படும் அபராத தொகையை கட்டாயம் செலுத்த முடியாது என்பதாலும் அதற்கு ஒரு புதுமையான தீர்வை கண்டறிந்தார். தெலுங்கானாவின் மக்புப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் நகரைச் சேர்ந்த இந்த முதியவரின் பெயர் மேகலா குர்மய்யா. இவர் தனது ஓய்வூதியத்தை வசூலிப்பதற்காக மண்டல அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இவரால் முகக்கவசம் வாங்க முடியவில்லை.
ஆனால் , முகக்கவசம் இல்லாமல் அரசாங்க அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்த குர்மய்யா தனது சொந்த முயற்சியில் ஒரு மாஸ்க்கை உருவாக்க முடிவு செய்தார். ஆடு மேய்க்கும் அவருக்கு ஒரு சிறந்த யோசனை தோன்றியுள்ளது. எனவே, அவர் ஒரு பறவையின் கூட்டினை எடுத்து அதனை முகக்கவாசமாக அணிந்து அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தார். இந்த முதியவரின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதில் இருந்தும், பிறருக்கு பரப்புவதில் இருந்தும் தடுக்க உதவும் ஒரு முக்கியமான தடையாக இருப்பது முகக்கவசங்கள் மட்டுமே என்பதை மருத்துவ நிபுணர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) ஒருவர் இரண்டு அடுக்கு கொண்ட முகக்கவசங்கள் அல்லது 2 முகக்கவசங்களை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி நடத்திய ஆய்வுகளின் படி, இரட்டை முகக்கவசங்களின் மறைப்பால் வைரஸ் வெளிப்படும் அபாயத்தை 95.9 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது கொரோனா அதிகம் பரவும் அபாயத்தை தடுப்பதற்காக அவசர நிலை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்டாலும் மக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க… கொரோனா விதிமீறல், மாஸ்க் அணியாததால் தாய்லாந்து பிரதமருக்கு ரூ.14,270 அபராதம்
இதற்கிடையில், தெலுங்கானாவில் நேற்றைய நிலவரப்படி 46,488 கொரோனா பாதிப்புகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அம்மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளில் இறப்பு விகிதம் 0.50 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 86.85 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்