விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால்
மறுபடியும் உன் மகனாய்
நான் பிறப்பேன்
அழாதே அம்மா
விதை குழியில்
இருந்து என்னால்
உன் விழி நீர்
துடைக்க முடியவில்லை
அழாதே அம்மா
கருவறையில் சுமந்தாய்
பத்து மாதம் தவமிருந்தாய்
பத்திரமாய் என்னை
நீ வளர்த்தாய்
சுமையென்று நீயும்
என்ன எண்ணியதில்லை
அழாதே அம்மா
நான் வளர்கின்ற போது
பகையின் வஞ்சனை
நான் அறிந்தேன்
உன்னை போல் பல
அம்மாக்களின் விழிகளில்
கண்ணீரும் செந்நீரும்
வடிவதை கண்டேன்
அழாதே அம்மா
தலைவரின் வழியிலே
பலரின் விழி நீர் துடைத்திட
களத்திலே ஆயுதம் ஏந்தி
தலை நிமிர்ந்து நானும்
புலியென நடந்தேன்
அழாதே அம்மா
ஈழ விடுதலைக்கு தானே
நானும் களத்திலே
உயிர் நீத்தேன் அம்மா
விதை குழியில் உறங்குகின்றேன்
என்ன போல் பல பிள்ளைகள்
இங்கே உறக்கம் கொள்கின்றார்கள்
அழாதே அம்மா
துயில்கின்ற வீரரின்
உறக்கத்தை கலைத்து விடாதே
நீயும் அழுது அம்மா
விடுதலைக்காய் மடிந்த
உன் மகன் வீரன் என்று
நீயும் பெருமை கொள்ளு தாயே
அழாதே அம்மா
விதை குழியில் இருந்து
என்னால் எழமுடிய வில்லை
விடிகின்ற தேசத்தில்
விடுதலை வீரனாய் நானிருப்பேன்
என்றும் உன் நினைவுகளிலே
நானும் கலந்திருப்பேன்
அழாதே அம்மா
விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால்
மறுபடியும் உன் மகனாய்
நான் பிறப்பேன் உன் மடியில்
நான் தூக்கம் கொள்வேன்
அப்போது நான் வாழ்வேன்
உன் மகனாய் அம்மா
அதுவரையும் நீயும்
அழாதே அம்மா
உன்னை போல் பல அம்மாக்கள்
அழுது கொண்டே இருக்கின்றனர்
அவர்களிடம் போய் சொல்
இனியும் விழி நீர் வேண்டாம் என்று
விடுதலை ஒளி படும் எம் வித்துடல் மீது
அன்று உயிர் பெறுவோம் நாங்கள்
அதுவரையும் நீயும்
அழாதே அம்மா
-சிவா TE
கருத்துகள்