நியூஸிலாந்து பயண ஏற்பாட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான - தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளற்ற - பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சில ஆஸ்திரேலியர்கள், நியூஸிலாந்திற்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் சம்பவங்கள் ஆரம்பித்திருக்கின்றன.
இதனையடுத்து, இவ்வாறான பயணம் குறித்து ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Greg Hunt கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய - நியூஸிலாந்து பயணம் தொடர்பாக இருநாடுகளும் கையாண்டிருக்கும் போக்குவரத்து ஏற்பாட்டிலுள்ள துவாரத்தைப் பயன்படுத்தி அதன்வழியாக தப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் ஆஸ்திரேலிர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் கோவிட் தொற்று கிட்டத்தட்ட முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் தனிமைப்படுத்தலற்ற பயணம் கடந்த 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பலர், இந்தப்பபயணக்குமிழி ஏற்பாட்டினை பயன்படுத்தி, நியூஸிலாந்து வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருக்கிறார்கள்.
நியூஸிலாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு எந்த அனுமதியும் மறுக்கப்படாத - அந்நாட்டின் நெகிழ்வான அணுகுமுறையை - பயன்படுத்தி, ஆஸ்திரேலியார்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஆஸ்திரேலிய - நியூஸிலாந்து நாடுகளுக்கு இடையிலான பயணத்தினை மேற்கொள்வோருக்கான நடைமுறைகள் குறித்து மீள்திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள, ஆஸ்திரேலிய சுகாதர அமைச்சர் Greg Hunt, உலகெங்கிலும் கோவிட் பரவல் மிகப்பயங்கரமாக விஸ்வரூபமெடுத்துவருகின்ற நிலையில், ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள பயண ஏற்பாடுகளை முறையாக பின்பற்றத் தவறுபவர்களும் வேண்டுமென்றே மீறுபவர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையிலான காரணங்கள் அல்லது மருத்துவ தேவையின் நிமித்தம் அவர்கள் வேறுநாடுகளுக்குச் சென்றிருந்தால் அதை அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பும்போது நிரூபிக்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
பயண விதிகளை மீறுபவர்களுக்கு 6660 வரையிலான தண்டம் அறவிடப்படும் என்றும் சட்டத்தை மீறுவது மாத்திரமன்றி அவசரகால விதிமுறைகளை மதியாதவர்களுக்கு 66 600 அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்