கொரோனா தடுப்பூசி! ஒவ்வாமையினால் மூவர் பலி - மன்றில் சுகாதார அமைச்சர் தகவல்
எஸ்ராசேனேக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை இன்றையதினம் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
“எஸ்ராசேனேக்கா” தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பலர் சில மணித்தியாலங்களிலேயே குருதி உறைவுக்கு உள்ளான பல சம்பவங்கள் உலகில் பதிவாகியுள்ளன. இலங்கையில் அறுவருக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டது.
அதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவுகள் தொடர்பான குழு தெரிவிக்கையில் குருதி உறைவுக்கும், தடுப்பூசிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அதாவது மில்லியன் மக்கள் தொகையில் 4-6 பேர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. எனினும் இவ்வாறு குருதி உறைவு ஏற்படுவது குறைவு.
எஸ்ராசேனேக்கா தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்