கருவறைத் தோழன்
கல்லறையில் உறங்குகிறான்..
உடல்கள் வேறாகி
உணர்வுகளால் ஒன்றானோம்
தோழமை எனும் உறவில்
ஒருவர் விரலை
ஒருவர் இறுகப்பற்றி
நடக்கப் பழகிய
நாள்முதலாய்
சகோதரர்கள் ஆனோம்
பள்ளியில் பருவமதில்
சேட்டைகள் பல புரிந்து
மாட்டிக் கொண்டதும்
இருவரும் சேர்ந்தே
தலைமை வாத்தியாரிடம்
பிரம்படி வாங்கியதும்
இலைக்கஞ்சிக்காய்
வரிசையில் முந்தியடித்து
வழுக்கி விழுந்து
காலில் சுழுக்கடிபட்டதும்
அதை எவருக்கும் தெரியாமல்
மறைத்ததும்
இன்றும் நினைவில் உண்டு
அந்த தழும்பு
நண்பா!
யுத்தம் நம்மை
சற்றுத் தூரமாகவே வைத்தது
இருந்தும் சந்திக்கும்
தெருக்களில் பேசுக்கொண்டோம்
அன்பையும்
பரிமாறிக் கொண்டோம்
நண்பா!
நீளும் போர்க்களத்தில்
நானும் ஒருபுலியென
உன்னை வரித்துக்கொண்ட
நாள் முதலாய்
உன்னிடம் உறவாட
பலமுறை முயன்றும்
தோற்றுப்போய்
இறுதியில்
உன் வித்துடலில்
விழிநீர் மாலை தொடுத்தேன்
கருவறையில் ஒன்றான
தோழன்
கல்லறையில் உறங்குகிறான்
தாயகக் கனவுகளை
நெஞ்சோடு சுமந்தபடி
தோழா!
நீ உறங்கும்
கல்லறை தேடி
ஓர்நாள் வருவேன்
விடுதலை மலர் கொண்டு
இல்லையேல்
உன்னருகில் தூங்குவேன்
விதையாகி.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.
கருத்துகள்