இப்போது குறைந்த வெப்பநிலை உள்ள போது, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றிப் பார்ப்போம்.
டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் சி.எம்.ஓ டாக்டர் ரிது சக்சேனா, குளிருக்கும் மதுவுக்கும் இடையிலான தொடர்பை விளக்குகிறார்.
“நீங்கள் மது அருந்தும்போது, ஆல்கஹால் உங்கள் உடலுக்குள் சென்ற பிறகு, வாஸோ டைலேஷன் எனப்படும் ரத்தக் குழாய் விரிவடைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் கை, கால்களின் இரத்த நாளங்கள் விரிவடைகின்றன, அவற்றில் அதிக இரத்தம் பாயத் தொடங்குகிறது. இதன் காரணமாக, நீங்கள் சூடாக உணர்கிறீர்கள். அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை இருப்பதால் மக்கள் அதிகமாக குடிக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்.”
“ஆனால் உண்மையில் ஆல்கஹால் காரணமாக, கைகளிலும் கால்களிலும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, அதனால், வெப்பம் உணரப்படுகிறது. இந்த உணர்வின் அடிப்படையில், மக்கள் குளிர்கால ஆடைகளை மஃப்ளர்கள், ஜாக்கெட்டுகள், தொப்பிகள், ஸ்வெட்டர் போன்றவற்றை அகற்றுகிறார்கள். அதனால், அவர்களின் உடலின் மைய வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது. ஆனால், இது, நமது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் தகவல்கள் இது வரை இல்லை” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் மதுவால் வெப்பம் அதிகரிக்கவில்லை என்றால், ஏன் வெப்பமாக உணர்கிறோம்?
மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர் ரோமெல் டிக்கு, இந்த ஐயத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக, “அதிக மது அருந்துபவர்களுக்கு முகம் சிவந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆல்கஹால் காரணமாக, வெளிப்புற உறுப்புகளான முகம், கைகள், கால்கள் போன்றவற்றின் இரத்த தமனிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது வெப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இரத்தம் உடலின் உள் பகுதிகளிலிருந்து வெளிப்புறத்திற்கு பயணிக்கிறது, இதனால் உடலின் மைய வெப்பநிலை குறைகிறது” என்று கூறுகிறார்.
“எனவே, குளிர் காலத்தில் மது அதிகமாக அருந்தும்போது, உடலின் மைய வெப்பநிலை குறைகிறது. இரத்த ஓட்டத்தின் அதிகரிப்பு உடலில் வியர்வையை உண்டாக்குகிறது. அதனால் உடலின் வெப்பநிலை மேலும் குறைகிறது. இவ்வாறாக, குளிர் காலத்தில் மது அதிகம் அருந்துவது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இப்போது குளிர்காலத்தில் மது அருந்துவதால் உயிருக்கு ஊறு விளையுமா என்ற கேள்வி எழுகிறது.
மதுவால் உயிருக்கு ஆபத்தா?
குளிர்காலத்தில் அதிகம் மது அருந்துவது, உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று எச்சரிக்கிறார் டாக்டர் ரிது சக்சேனா.
“குளிர்காலத்தில் அதிகமாக மது அருந்தினால், முதல் விஷயம், சரியான பாதுகாப்பான உடை அணிவதைத் தவிர்ப்பார்கள். மூளையில் ஆல்கஹால் பாதிப்பு காரணமாக, நமது உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பது நமக்கே தெரியாது. இந்தச் சூழ்நிலையில், உடலின் வெப்பநிலை 37° C-க்கு கீழே செல்லும்போது, படிப்படியாக ஹைப்போ தெர்மியா தாக்கத் தொடங்கும். ஹைப்போ தெர்மியா ஒருவரை கோமா நிலைக்குக் கூட இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்” என்று அவர் கூறுகிறார்.
கருத்துகள்